பழனி முருகன் கோயிலில் பிப்.4ம் தேதி தைப்பூச தேரோட்டம்..

 
பழனி முருகன் கோயிலில் பிப்.4ம் தேதி தைப்பூச தேரோட்டம்..

பழனியில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம்  படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில்  காலை‌ 9.30 மணியளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து தரிசித்துச் செல்கின்றனர். 6ம்நாள்  தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பிப்ரவரி 3ம்தேதி மாலை நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித் தேரோட்டமும், பிப்ரவரி 4ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.  

palani

தைப்பூசத்தையொட்டி, இன்று முதல் நாள்தோறும் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.  வருகிற பிப்ரவரி 7ம்தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு 400க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களில் தங்குமிடம், மின்சாரம், குடிநீர், கழிவறை, மருத்துவம், உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 3000ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.