மே 10 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டம் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 6 முதல் மே 10ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 18ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசின் முழு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து 19 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த 21ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றது. நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வந்தது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளான கடந்த 24ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் மீது அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்தனர். இதன் பிறகு சபாநாயகர் அப்பாவு பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதை தொடர்ந்து ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்று அப்பாவு அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதம் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் நிலையில் மானிய கோரிக்கை விவாதம் மே 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது, எம்எல்ஏக்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் கேள்வியும் அமைச்சரவை அமைச்சர்களின் பதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். மே 7 மற்றும் மே 9 முதலமைச்சர் ஸ்டாலின் துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது . அன்று தான் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது .அந்த நாளிலேயே முதலமைச்சரின் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.