தங்கைக்கு வினோத சீர்வரிசை வழங்கிய அண்ணன்.. மானாமதுரையில் நெகிழ்ச்சி..
மானாமதுரையில் தங்கையின் திருமணத்திற்கு ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடா, சண்டை சேவல், கன்னி நாய்கள் என ஆசைப்பட்ட அனைத்தையும் அவரது அண்ணன் சீர்வரிசையாக வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்- செல்வி தம்பதி. இவர்களுக்கு ராகுல் என்கிற மகனும், விரேஷ்மா என்கிற மகளும் உள்ளனர். இதில் விரேஷ்மாவின் திருமணம் நேற்று நடைபெற்றது. அப்போது தங்கை ஆசைப்பட்ட அனைத்தையும் சீர்வரிசையாக வழங்க அவருடைய அண்ணன் ராகுல் முடிவு செய்தார். அதன்படி ஜல்லிக்கட்டு காளை, சண்டைக் கிடா, சண்டை சேவல், கன்னி நாய்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக வழங்கி இருக்கிறார்.
சிறுவயது முதலே விரேஷ்மா இவற்றை ஆசையாக வளர்த்து வந்ததாகவும், அவற்றை பிரிய மனம் இல்லாததால், தங்கையின் ஆசைக்கு ஏற்ப இவற்றை சீர்வரிசையாக வழங்கியிருக்கிறார் பாசக்கார அண்ணன். அத்துடன், காளை, கிடா, சேவல் ஆகியவற்றையும் மேடையில் ஏற்றி, புதுமணத் தம்பதி புகைப்படம் மற்றும் வீடியோக்களும் எடுத்துக் கொண்டனர்.. இந்த வித்தியாசமான சீர்வரிசை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..