சென்னையில் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது!!
வரலாற்றில் முதன்முறையாக சென்னையில் மலர் கண்காட்சி இன்று தொடங்கியது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 91வது பிறந்த நாளையொட்டி சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் பிரமாண்ட மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஊட்டி, கிருஷ்ணகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. சென்னையில் செயற்கையாக குளிரூட்டப்பட்ட அறைகளில் மலர்கண்காட்சி நடத்தப்படுவதால் மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சியில் சுமார் 4 லட்சம் பல்வேறு வகையான மலர்களும், 10 ஆயிரம் மலர் தொட்டிகள், இரண்டு பழங்களும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன. கேரட் ,முள்ளங்கி, பரங்கிக்காய் ,கருணைக்கிழங்கு ,தர்பூசணி முதலில் காய்கறிகளும் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
வருகிற ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். மாணவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி ஆண்டுதோறும் ஜூன் மூன்றாம் தேதி சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படும் . சென்னை மக்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.