இனி கொரோனா இறப்பு நிவாரணம் பெற 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - தமிழக அரசு..
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெறுவதற்கு இனி 90 நாட்காளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு நிலையில், அதில் 55,300 மனுக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 20-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்படி, மார்ச் 20-ம் தேதி்க்கு முன் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் அதாவது மே 18-ம் தேதிக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 20 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரி விண்ணப்பிப்போர், இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குறிப்பிட்ட 90 நாட்களுக்கு நிவாரணம் பெற விண்ணப்பிக்க இயலாதவர்கள், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுக்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலித்து தீர்வு காணும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆகையால் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி உரிய காலத்தில் விண்ணப்பித்து நிவாரணம் பெற்றுகொள்ளலாம் என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.