#BREAKING விரைவில் மால்களிலும் மஞ்சப்பை தரும் இயந்திரம்!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை தமிழக அரசு சமீபத்தில் தொடங்கி வைத்தது. இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சள் பை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் முதற்கட்டமாக பத்து ரூபாய் நாணயத்தை தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் மஞ்சப்பை வந்து விழும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மஞ்சள் பை வந்து விழும் திட்டம் சென்னை கோயம்பேட்டில் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு இயந்திரத்தில் மஞ்சள் பை பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் வணிக வளாகங்களிலும் ரூ.10க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டை போல பாரிமுனை மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களிலும் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்படும் என சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.