"குற்றமே நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும்" - முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!!
குற்றமே நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதற்கு பதில் குற்றமே நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஆகியவற்றை ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக மோதல்களை தடுக்க பல்வேறு அமைப்பினருடன் இணைந்து காவல்துறையினர் செயல்படவேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்று தரும் துறையாக இல்லாமல் குற்றமே நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " தொழில் போட்டியால் உருவாகும் ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது. போக்ஸோ வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடாது. ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளிடம் சாதி, மதம் என அடையாளப் படுத்த கூடாது. குடிசை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அமைச்சர் சொன்னார். இது போன்ற அடையாளப்படுத்துதல் கூடாது. முதல்-அமைச்சராக இருப்பதால் எல்லாம் என்னால்தான் என நினைக்கவில்லை. நினைக்கவும் மாட்டேன்; அமைச்சர்கள் , அரசு அலுவலர்கள் என பலரும் ஒருங்கிணைந்து இருப்பதுதான் இந்த அரசு . இது நமது அரசு என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும்" என்றார்.