ஓட்டுநரை தன் இருக்கையில் அமர வைத்து, தானே காரை ஓட்டிச் சென்ற முதன்மை கல்வி அலுவலர்.. - குவியும் பாராட்டுக்கள்..
பணி நிறைவு பெறும் தனது ஓட்டுநரை தனது இருக்கையில் அமர வைத்து, தானே காரை ஓட்டிச்சென்ற விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியாவின் செயல் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகாராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணப்பிரியா. முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்து வந்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் விழுப்புரம் மாவட்டத்தின் 30வது முதன்மை கல்வி அலுவலராகவும், 3வது பெண் அலுவலராகவும் இருந்து வருகிறார்.. தனது நிர்வாகத்தின் மூலம் ஏற்கனவே மக்களிடம் நன்மதிப்பை பெற்றவராக இருந்து வருபவர் கிருஷ்ணப்பிரியா.
இந்நிலையில் நேற்று, விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலரின் ஓட்டுநர் ஓய்வு பெற்றார். அவரை காரில் தனது இருக்கையில் அமரவைத்து, சிஇஓ-வே வாகனத்தை ஓட்டி சென்றிருக்கிறார். தனது ஓட்டுநர் பணி நிறைவு ஓய்வு பெற்றதை அடுத்து, அவரை கௌரவிக்கும் விதமாக கிருஷ்ணப்பிரியா தனது இருக்கையில் ஒட்டுநரை அமர வைத்து, தானே காரை ஓட்டி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தன்னை இத்தனை காலமாக பாதுகாப்பாக அழைத்துச் சென்ற ஓட்டுநரை, கௌரவிக்க கிருஷ்ணப்பிரியா செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.