ஆடு திருடன் என கூறியதால் ஆத்திரம்.... துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இளைஞன் கைது

 
gun

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தன்னை ஆடு திருடன் என கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் ஆடு மேய்ப்பவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையை சேர்ந்த சின்னசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று அவரது கிடையில் இரண்டு ஆடுகள் வழிமாறி சென்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. வேறு எங்கும் தேடியும் கிடைக்காததால் மனவேதனையில் இருந்துள்ளார். இதுகுறித்து சின்னசாமியிடம் விசாரித்த அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவர், அவருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த சின்னசாமி எனது ஆட்டை திருடியது நீதான் என ரஞ்சித் மீது பழிசுமத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், அப்போது அங்கு சென்ற அய்யாசாமி என்பவர் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அனுப்பியுள்ளார். தன்னை ஆடு திருடியவன் என கூறியதால் ஆத்திரமடைந்த ரஞ்சித் வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியால் சின்னசாமியை முதுகிலேயே சுட்டு கொலை செய்தார். பின்னர், அவரது வீட்டிற்கு சென்று தூங்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சின்னசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் ரஞ்சித்தை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.