வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு..- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

 
புயல் எச்சரிக்கை

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வங்கக்கடலில் புதிதாக புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள  வானிலை முன்னறிவிப்பில், குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால்,  தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 

வானிலை

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது  வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும்,  வருகிற   22ம் தேதி, காற்றழுத்தத்தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வுமண்டலமாக மாறக்கூடும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலில் இருக்கக்கூடிய சீரான நிலை இதே சூழலில்  தொடரும்பட்சத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் அடுத்த 72 மணி நேரத்தில் புயலாக உருமாற வாய்ப்பிருப்பதாகவும்,  பின்னர்  வடக்கு ஆந்திரா மற்றும்   தெற்கு ஒடிசா பகுதியை நோக்கி நகர்ந்து கரையை கடப்பதற்கான  வாய்ப்புள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.