தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இதுவரை இல்லை - அமைச்சர் மா.சு. தகவல்!!
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,312 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 13 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 605 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,029 ஆக உள்ளது. அத்துடன் 17,487 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற அண்டை மாநிலங்கள் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு பதிவாகவில்லை. நோய் கண்டறிவதற்கான ஆய்வகம் சென்னையில் அமைக்க ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை தமிழகத்தில் பரவாமல் இருக்க விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகரித்து வருகிறது . இதனால் குறிப்பிட்ட 63 வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குரங்கம்மை பரிசோதனை செய்யப்படுகிறது"என்றார் .
தொடர்ந்து பேசிய அவரிடம் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஓரிரு நாளில் முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.