பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை.. - டிஜிபி விளக்கம்..
பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடிக்கு மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறியதாகவும், அதனை ஆதாரத்துடன் ஆளுநருக்கு வழங்கி இருப்பதாகவும் கூறினார். மேலும், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றிருந்த டிஜிபி சைலேந்திர பாபு, அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அஹில், பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை என்றார். தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமாக தான் உள்ளது என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுவதாகவும், உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது என்று டிஜிபி தெரிவித்தார். மேலும், 100 ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் உள்ளது என்றார். தமிழக காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது அந்தமான், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் தமிழக காவல்துறையே பாதுகாப்புக்கு செல்கிறது என்றும் தெரிவித்தார்..