தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை.. - அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்..
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
பெருநகர காவல்துறை சென்னை மருத்துவக்கல்லூரி இணைந்து , போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது என்று தெரிவித்தார். 169 டன் பான்பாரக் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் , அண்டை மாநிலங்களிருந்தே கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும் கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் உள்ள 32 கிடங்குகளில் எவ்வளவு மருந்துகள் உள்ளன என்பதை அறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதற்காக 104 என்கிற எண் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து இல்லை என்று கூறினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார். மருந்து தட்டுபாடு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.