மத்திய அரசின் இந்த உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது.. - பாஜக விளக்கம்..

 
நாராயணன் திருப்பதி


மத்திய நிலத்தடி நீர் ஆணைய உத்தரவு தமிழகத்திற்கு  பொருந்தாது என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நிலத்தடி நீர் எடுப்பதற்கு அனைவரும் முறையான அனுமதி பெற வேண்டும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கடந்த சில தினங்களாக, அந்த ஆணையத்தின் விளம்பரத்தை சுட்டிக்காட்டி தமிழக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழகத்திற்கு இது பொருந்தாது என்பதை அறிந்துகொள்ளாமல் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

நீர்

தமிழகத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் வெளி மாநிங்களில் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வரும் நிலையில், பொதுவான விளம்பரமாகவே இது கொடுக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆணையங்கள் இல்லாத நிலையில், அந்த மாநிலங்களில் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அப்பணியினை செய்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீர் ஆணையங்கள் நிலத்தடி நீர் குறித்த விவகாரங்களை கவனித்து கொள்ளும். மேலும், தமிழகத்தில் நிலத்தடி நீர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தமிழக அரசினால் கையாளப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் இந்த உத்தரவு  தமிழகத்துக்கு பொருந்தாது.. - பாஜக விளக்கம்..

மத்திய அரசின் வழிகாட்டுதலோடு முறையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது உள்ள விதிமுறைகளே தொடர்கிறது. இந்த பொது அறிவிப்பு எண் : 3 /2022 விளம்பரம் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தின் இணைய தளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.