சொத்துவரியை அபராதம் இல்லாமல் செலுத்த இன்றே கடைசிநாள்.. - சென்னை மாநகராட்சி..
சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை அபராதம் இல்லாமல் செலுத்து இன்றே கடைசி நாளாகும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்கள் சொத்துவரி செலுத்துவது அவசியம். அவ்வாறு பெறப்படும் வரித்தொகை மாநகராட்சிக்கு முக்கிய வருவாயாக இருந்து வருகிறது. அரையாண்டு வீதத்தில் வருடத்திற்கு 2 முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. அதில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி வசூல் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. தற்போது 2-வது அரையாண்டு நடந்து வரும் நிலையிக், முதல் அரையாண்டில் சொத்து வரியை இதுவரை செலுத்தாதவர்களுக்கு அபராதம் இல்லாமல் கட்ட மாநகராட்சி கூடுதல் வழங்கியிருந்தது.
அதன்படி அவகாசம் கொடுத்த நாள் இன்றுடன் (15-ந் தேதி) முடிவடைகிறது. ஆகையால் இதுவரை சொத்துவரி செலுத்தாத பொதுமக்கள் இன்றைக்குள் செலுத்த வேண்டும். நாளையில் இருந்து செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படும். அபராதத்தை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் இன்று பலர் சொத்துவரியை செலுத்து வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் தெரிவிப்பதாவது, “மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை காலத்திற்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்க வேண்டும். முதல் அரையாண்டு கால சொத்து வரி இன்று இரவு வரை ஆன்லைனில் செலுத்தலாம். நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும். மேலும் பெரும் தொகையை நீண்ட காலமாக செலுத்தாமல் இருக்கும் சிலர் மீது அதிரடியாக பல்வேறு நடவடிக்கையும் தொடர்கிறது. எனவே மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.