தொழுப்பேடு விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு..

 
 லாரி மீது அரசு பேருந்து மோதி  விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில்,  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.  

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சென்னை -   திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  கடந்த 8 ஆம் தேதி   காலை  50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று  சென்னையிலிருந்து -  சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது முன்னாள் இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த  லாரியை முந்தி செல்ல அரசு பேருந்து முயன்றதாக தெரிகிறது.  இதில்  லாரியின் இடது பக்கமாக பேருந்து அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட  ஐந்து பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.  மேலும்  10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுப்பாக்கம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு   செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இறப்பு

அப்போது சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.   இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.  தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும்  நிவாரணம்  அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.  ஏற்கனவே 6 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.