சரபங்காற்றில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள் சடலமாக மீட்பு - எடப்பாடியில் சோகம்

 
river death

சேலம் மாவட்டம் எடப்பாடியில் சரபங்காற்றில் அடித்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகேயுள்ள சரபங்காற்றில் நேற்று மாலை இரண்டு இளைஞர்கள் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.  அவர்கள் இருவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் அந்த இரண்டு இளைஞர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அடித்துச் செல்லப்பட்ட இருவரும் அதே பகுதியை சேர்ந்த கவுதம் மற்றும் ஐயப்பன் என்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாயமான இரண்டு இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவர்களின் உடல் கிடைக்காததால், இன்று காலை மீண்டும் தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலை கவுதம் மற்றும் ஐயப்பன் ஆகியோர் சடலமாக ஆற்றில் கண்டெடுக்கப்பட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் எடப்பாடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.