#BREAKING உதயநிதியை அமைச்சராக்கக் கோரி திருச்சியில் தீர்மானம்!!
திமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது உதயநிதி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்பின்னர் கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பின்னர் சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு சென்றார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைச்சர் பதவி வழங்கவில்லை. இதனால் கட்சிக்குள் உதயநிதிக்கு ஆதரவாளர்களாக இருக்கும் முக்கிய புள்ளிகள் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று அவரது நண்பரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுகுறித்து திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாகவும் , இதனால் விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக அறிவிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் உதயநிதியை அமைச்சராக வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.