வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த விவகாரம்: மருத்துவர் சுப்பையாவை மார்ச் 31 வரை சிறையில் அடைக்க உத்தரவு..
ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும் மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினரும் மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) தேசியத் தலைவராக கடந்த 12017 - 2020 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் மருத்துவர் சுப்பையா. இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வசித்து வந்தார். அப்போது தனது காரை அதே குடியிருப்பில் வசித்து வரும் மூதாட்டி ஒருவருக்குச் சொந்தமான பார்க்கிங்கில் நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மூதாட்டின் வீட்டு வாசலில் சுப்பையா சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 2020ல் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அவரை ஆதம்பாக்கம் காவல் துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும் மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.