திமுக தலைவராக தேர்வு - மு.க.ஸ்டாலினை சந்தித்து கவிஞர் வைரமுத்து வாழ்த்து

 
stalin vairamuthu

தி.மு.க. தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன்  கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் கடந்த 09ம் தேதி  முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில், திமுகவின் 15-வது பொதுத் தேர்தலை ஆற்காடு வீராசாமி ஆணையாளராக இருந்து நடத்தினார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றனர். இவர்கள் முன்னிலையில்  திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் , 4 தணிக்கை குழு உறுப்பினர்கள்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில் திமுக தலைவராக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டார்.  அதேபோல்  பொது செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மட்டுமே  போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ததால் அவர்கள் மீண்டும்  போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதேபோல் திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டார். 


இந்நிலையில் தி.மு.க. தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்து, திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில், "தி.மு.க தலைவராய் மீண்டும் மகுடம் பூண்ட முதல்-அமைச்சரை இல்லத்தில் சந்தித்து வாழ்த்துரைத்தேன். எருதுபோல் உழைப்பு, ஏழைபோல் உணவு, திராவிடத் தினவு, தீராத கனவு கவலை ஏன் உனக்கு? கால்மாட்டில் கிழக்கு, சுழல்வாள் எடுத்து சூழ்ச்சியை உடைத்து, ரவுத்திரம் படைத்து, ராஜாங்கம் நடத்து" என குறிப்பிட்டுள்ளார்.