‘எந்நாளும் .. எண்ணாலும் எண்ணுகிறேன்..’ கலைஞர் பிறந்தநாளையொட்டி வைரமுத்து ட்வீட்..
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் அவரது மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கும், ஓமந்தூரார் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது முழு உருவ சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் கலைஞர் மீது தீவிர பற்று கொண்டவரும், திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்து, தனது வழக்கமான கவிதை பாணியில் கலைஞரை நினைவு கூர்ந்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
“அஞ்சுகத்தாயின் ஓரே மகன் ஆகையால்
நீ ஒன்றானவன்
கருப்பென்றும், சிவப்பென்றும்
இரண்டானவன்
பிறந்தநாளால் மூன்றானவர்...
தியாகராயர்- பெரியார்- அண்ணா- கலைஞர்
என்ற வரலாற்று வரிசையால் நான்கானவன்
தமிழ்நாட்டு முதலமைச்சராய்
ஐம்முறை ஆண்டதால் ஐந்தானவன்
எமக்கு இனிப்பு
இந்திக்கு கசப்பு
ஏழைக்கு உப்பு
வயிற்றில் கரைத்ததால் எதிரிக்கு புளிப்பு
வாதத்தில் உறைப்பு
பித்தம் நீக்கும் துவர்ப்பு
அறுவகைச் சுவைகளால் ஆறானவன்
வாரமெல்லாம் செய்தியானதால்
ஏழானவன்
திசையெல்லாம் இசைபட வாழ்ந்ததால்
எட்டானவன்
கிரகங்களெல்லாம் சுற்றி வந்த சூரியன் என்பதால்
நீ நவமானவன்
அள்ளிக் கொடுத்த முரசொலி விருதால்
லட்சமானவன்
எழுத்தாளர்களுக்குக் கொட்டிக் கொடுத்ததால்
கோடியானவன்
உன்னை
எண்ணங்களாலும் சிந்திக்கலாம்;
எண்களாலும் சிந்திக்கலாம்..” என்று குறிப்பிட்டுள்ளார்.