புதிய கல்விக்கொள்கையை முடிவு செய்தது அம்பேத்கர் தான் - வானதி சீனிவாசன்

 
Vanathi seenivasan

புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை எனவும் அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது எனவும் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் உள்ள கோடி சுவாமி குருபூஜையில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்யவில்லை. அம்பேத்கர் மற்றும் அவருடன் இருந்த குழுவும் தான் முடிவு செய்தது. இந்த நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும், தேசிய மொழிகள் என, பா.ஜ.க சொல்கிறது. குறிப்பிட்ட மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் இல்லை. தாய்மொழி வழியிலேயே குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சம். இப்படியான கல்விக்கொள்கையை எதிர்க்கின்றனர்.

vanathi--srinivas-3

வள்ளலாரின், 200வது பிறந்தநாள் விழாவை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வள்ளலாரின் சமய அடையாளங்களை மறைத்து படங்கள் வரைந்துள்ளனர். திருநீறு பூசாத அவரது படங்களை வைப்பதில் முதல்வருக்கும், தி.மு.க., அரசுக்கும் என்ன ஆசை என்று தெரியவில்லை. வடலுாரில் பிரசாதமாக கொடுப்பதே திருநீறு தான். தமிழக மக்கள் பலரும் திருநீறு வைக்கின்றனர். திருநீறு தமிழகத்தின் சமய அடையாளமாக உள்ளது. தமிழகத்தின் சமய அடையாளங்களை மறைப்பதன் நோக்கம் குறித்து, தி.மு.க., அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்.
 இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.