வேளாங்கண்ணி பேராலய திருவிழா வருகிற 29ம் தேதி தொடக்கம்

 
Velanganni

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா வருகிற 29ம் தேதி தொடங்குகிறது. 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் இந்த பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து இந்தாண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது. 

அதன்படி இந்தாண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்  8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து விழா முன்னேற்பாடுகளை நாகை மாவட்ட நிர்வாகம், ஆலய நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். விழாவையொட்டி பேராலய வளாகம் மற்றும் சுற்றுச்சுவர் பகுதி முழுவதும் வர்ணம் பூசப்பட்டு பேராலயம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.