விக்ரம் படம் பார்க்க அழைத்துச்செல்ல மறுத்த கணவர்! மனைவி எடுத்த விபரீத முடிவு

 
வ்

கணவர் தன்னை விக்ரம் சினிமாவுக்கு அழைத்துச் செல்லவில்லை என்பதற்காக  மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  பொங்கலூர் பகுதியில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது சினிமா மோகம். சினிமா பார்க்கவில்லை என்றால் சாப்பிடப் பிடிக்காத நபர்களும் இருக்கிறார்கள்.  அந்த அளவிற்கு சினிமா மோகம் அதிகமாக உள்ளவர்கள் உள்ள நிலையில்,  சினிமா பார்க்க முடியாத விரக்தியில் மனமுடைந்து ஒரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர் அடுத்த கொடுவாய் வினோபா நகர்.   இப்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.   இவரது மனைவி கவிதா.  கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்திருக்கிறது.   கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் ரமேஷ் .  மனைவி கவிதா வீட்டில் உள்ளார்.

த்

அண்மையில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்தப் படம் பார்க்க தன்னை அழைத்துச் செல்லுமாறு கணவரிடம் கவிதா கூறியிருக்கிறார் . ஆனால் கணவர் அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.   தான் எப்படியும் அந்த படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று சொல்லி இருக்கிறார் கவிதா.

 அதேசமயம் ரமேஷ் பிடிவாதமாக மறுத்து இருக்கிறார் .   இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த வாய் தகராறில் கவிதா ரொம்பவே மனமுடைந்து போய் இருந்திருக்கிறார்.   வாக்குவாதத்திற்கு  பின்னர் கணவர் ரமேஷ் வெளியே சென்றிருந்த நேரத்தில்,  கவிதா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவிநாசிபாளையம் போலீசார் தூக்கில் தொங்கிய கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . கவிதாவின் தற்கொலை தொடர்பாக கணவரிடம் இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விக்ரம் படம் பார்க்க கணவர் அழைத்துச் செல்லாததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொங்கலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.