"ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது" - மே.வங்க ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜக்தீப் தன்கர் -முதல்வர் மம்தா பானர்ஜி இடையே ஆரம்ப காலம் முதல் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது . அந்த வகையில் சமீபத்தில் ஆளுநர் ஜக்தீப் தன்கரை முதல்வர் மம்தா ட்விட்டரில் பிளாக் செய்தார். இதனால் ஆளுநருக்கும் மேற்குவங்க அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில் சட்டப்பேரவையை முடக்கி ஆளுநர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தின் 174-வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நேற்று முதல் சட்டப்பேரவையை முடக்கி வைக்க உத்தரவிட்டுள்ளார் ஆளுநர் ஜக்தீப் தன்கர் . இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் மோதல் போக்கு அரசுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் நோக்கத்தில், மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மேற்குவங்க சட்டமன்ற கூட்டத்தொடரை நிறுத்திவைத்த ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "#மேற்கு வங்காள ஆளுநரின் மேற்கு வங்க சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் 'குறியீட்டு' தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.