ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன்?
ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன் ? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது .
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வரும் நிலையில் அவர் ரூ.811 கோடி டெண்டர் முறை கேட்டு விவகாரத்தில் ஈடுபட்டதாக அவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 4 ஐஏஎஸ் உட்பட 12 அதிகாரிகள் அவர் உடனடியாக இருந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் , "முன்னாள் அமைச்சரின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க திமுக அரசுக்கு தயக்கம் ஏன் ? சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.811 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடரப்பட்ட முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி, 7மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியும், இதுவரை ஒப்புதல் வழங்காதது பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, இனியும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு எந்த அதிகாரியும் துணைபோகாத அளவுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளது.