53 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக - நெஞ்சில் சாய்ந்து மனைவி ஆனந்தக்கண்ணீர்
இரண்டு முறை நகர்மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர் மூன்றாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாக நகர்மன்றத் தலைவராக தேர்வாகியுள்ளதை அடுத்து அவரின் மனைவி கட்டித்தழுவி நெஞ்சில் சாய்ந்து ஆனந்தக்கண்ணீர் விட்டு நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி தலைவர் பதவியை ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக கைப்பற்றியிருக்கிறது. இன்று காலை நகர் மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 24 வது வார்டில் 677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சேது கருணாநிதியைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. அதனால் நகர்மன்றத் தலைவராக அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன்பின்னர் நகர்மன்றத் தலைவர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் அமர வைக்கப்பட்டார். அப்போது கட்சியின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அப்போது அவரது மனைவி வாழ்த்து தெரிவிக்க வந்தார். கணவர் சேது கருணாநிதியை கட்டித்தழுவி பின்னர் நெஞ்சில் சாய்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்.
இரண்டு முறை நகர் மன்றத் தேர்தலில் சேது கருணாநிதி தோல்வி பெற்று மூன்றாவது முறையாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால்தான் அந்த நெகிழ்ச்சியை இப்படி ஆனந்தக் கண்ணீர் விட்டு அவரின் மனைவி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.