பெண்கள் 'ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள்’.. அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..

 
ttv


அரசு விழாவில் பெண்களை ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியது கண்டத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  

பெண்கள் 'ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள்’.. அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி,  மகளிர் இலவச பயணத்திற்காக இந்த ஆண்டு 1,600 கோடி ரூபாயை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி  தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசு விழா ஒன்றில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி, பெண்களை பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று கூறியிருக்கிறார்.  இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

ponmudi

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து ‘ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொளி அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது.  பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்தார். இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா?  மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது. பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?! ” என்று குறிப்பிட்டுள்ளார்.