உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.. - கேப்டன் வாழ்த்து..
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல் உறுப்புகளில் குறைபாடுகள் கொண்டு சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளிகள் மீது அக்கறை செலுத்தி, அவர்கள் அனைவரும் நம்மில் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகத்தான் உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நான் திரையுலகில் இருந்த காலந்தொட்டு மாற்றுத் திறனாளிகள் மீது தனி அக்கறையும், கவனமும் செலுத்தி அவர்களுக்கு, மூன்று சக்கர சைக்கிள்களும், தையல் இயந்திரங்களும், காது கேளாதோருக்கு காது கேட்கும் கருவிகளும், நடப்பதற்கு உரிய ஊன்று கோல்களும், செயற்கை மாற்று உறுப்புகளும், கண் பார்வையற்றோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி வருகிறேன்.
மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் அவர்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் ஊனத்தை எண்ணி வருந்தாமல் நம்பிக்கை இழக்காமல் தங்களுடைய சோதனை வாழ்க்கையை சாதனை வாழ்க்கையாக மாற்றி மற்றவர்களுக்கு உதாரணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ வேண்டும் என உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் அனைவரையும் வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..