ஏலம்போன ஒய்.ஜி.மதுவந்தியின் வீடு.. ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மீட்டுத்தர மதுவந்தி கோரிக்கை..
கனடனை திருப்பி செலுத்தாததால் ஒய்.ஜி மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படும் நிலையில், விட்டில் இருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான தனது பொருட்களை மீட்டுத்தருமாறு அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான ஒய்.ஜி.மதுவந்தி பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியதாக தெரிகிறது. வாங்கிய கடனுக்கான வட்டித்தொகை 1 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாயை அவர் கட்ட தவறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பைனான்ஸ் நிறுவனம் சென்னை மெட்ரோபாலிட்டன் அல்லிக்குளம் நீதிமன்றத்தை நாடியது.
அதன்படி, ஆழ்வார் பேட்டையில் உள்ள மதுவந்திக்கு சொந்தமான வீட்டை பூட்டி சீல் வைக்கவும் அனுமதி பெற்றது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் வினோத் குமார் மற்றும் தேனாம்பேட்டை போலீசார் முன்னிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்தனர். மேலும், அதன் சாவியை பைனான்ஸ் நிறுவன மண்டல மேலாளர் உமாசங்கரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வீட்டில் மதுவந்தியின் பொருட்களை ஒரு மாதத்திற்குள் எடுக்கவும் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் அவர் தனது பொருட்களை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த வீட்டை பைனான்ஸ் நிறுவனம் ஏலம் மூலம் மற்றொருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் பைனான்ஸ் நிறுவனம் மதுவந்தியின் பொருட்களை அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் வைத்துள்ளனர்.
இந்த தகவல் நேற்று தான் மதுவந்திக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பைனான்ஸ் கடன் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளபோது, தான் ஊரில் இல்லாததை அறிந்து, பைனான்ஸ் கம்பெனியின் மண்டல மேலாளர் உமா சங்கர் மற்றும் கார்த்திகேயன் மற்றும் 10 நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ. 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மீட்டுத் தரும்படி மதுவந்தி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.