வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் உயிரிழப்பு - அண்ணாமலை வேதனை!!

 
annamalai

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்ற நாளிதழ் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், வயிற்றுவலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்ற நாளிதழ் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

Annamalai

வயிற்றுப் பகுதியை ஸ்கேன் எடுக்கக் கூறிய மருத்துவர், மருத்துவமனையில் அதற்கான ஊழியர்கள் இல்லாததால், ஸ்கேன் செய்யாமலேயே சிகிச்சையைத் தொடர்ந்ததாகவும், தவறான சிகிச்சை காரணமாகவே சிறுவன் இறந்துள்ளார் எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். 

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் நிகழ்வது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஆனால் திமுக அரசோ, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, ஒரு நாள் செய்திதானே என்று, இது குறித்து எந்தக் கவலையும் இன்றி இருக்கிறார்கள். 


அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தும் எளிய மக்கள் மீது திமுக காட்டும் புறக்கணிப்பு, பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல தனியார் மருத்துவமனைகளை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்காக, திமுக அரசு இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

தங்கள் ஒரே மகனை இழந்து வாடும் பெற்றோருக்கு, ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பல மரணங்கள் ஏற்பட்டும், அரசு மருத்துவமனைகளின் பிரச்சினைகளைச் சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.