ராணுவ பயிற்சி மையத்திலிருந்து தவறி கிராமத்திற்குள் சென்ற துப்பாக்கி தோட்டா!

 
துப்பாக்கி

செங்கல்பட்டு அருகே இராணுவ பயிற்சி மையத்திலிருந்து  தவறி கிராமத்திற்குள் சென்ற துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு ஏற்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று காலை இந்த பயிற்சி மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர்தூரத்தில் உள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் மனைவி ஜெயலட்சுமி தனது வீட்டு வரவேற்பு அறையில்  நின்றுக்கொண்டிருந்த போது அவரிம்  உடலின் மீது துப்பாக்கி தோட்டா பட்டது. நல்வாய்ப்பாக  அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து, கிராம மக்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

செங்கல்பட்டு தாசில்தார், வருவாய் துறை அதிகாரிகள்,போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னேரி கிராமத்தை ஆய்வு செய்து கிராம மக்களிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அடிக்கடி இது போன்ற துப்பாக்கி தோட்டாக்கள் கிராமத்தில் வந்து விழுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அதே போல ராணுவ பயிற்சி மையம் உள்ள பகுதி  மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குள் உட்பட்ட பகுதி என்பதால் அங்கு மறைமலைநகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர்  முத்து சுப்ரமணியம் மற்றும் அனுமந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரும் சென்று விசாரணை நடத்தினர்.