என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயி வழக்கு

 
high court

என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

என்.எல்.சி. நிறுவனம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதற்காக நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. என்எல்சி நிர்வாகத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முற்றுகை போராட்டம் நடத்திய நிலையில், அது வன்முறையாக மாறியது. இருப்பினும் என்.எல்.சி நிறுவனம்  கால்வாய் அமைக்கு பணிகளை தொடர்ந்து வருகிறது. 

10 ஆண்டுகளுக்கு முன்பே கையகப்படுத்தப்பட்ட நிலம் -  என்.எல்.சி. பணிகள் குறித்து ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கம்..

இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல் சட்டப்பிரிவு 101ன் படி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து கொள்ள வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு முறையிடப்பட்டுள்ள நிலையில்,, பிற்பகலில் வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.