ஈச்சர் லாரியை வழிமறித்து மிரட்டிய கும்பல்... சங்ககிரி சுங்கச்சாவடி அருகே பரபரப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்கச்சாவடி அருகே பட்டப்பகலில் 20க்கு மேற்பட்ட கும்பல் ஈச்சர் லாரியில் வந்த குடும்பத்தினரை விரட்டி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் செந்தில்குமார் (44). இவருக்கு காந்திமதி (39) என்ற மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சி வங்கியில் தவணை முறையில் ஈச்சர் லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவர் வாங்கிய ஈச்சர் வாகனத்தின் கடன் தவணையை கடந்த ஐந்து மாதங்களாக கட்டவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார் தனது மனைவி மகனுடன் நேற்று காலை ஆத்தூரில் இருந்து ஈச்சர் வாகனத்தில் கோபிசெட்டிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் என்ற இடத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள் ஈச்சர் வாகனத்தை நிறுத்தி செந்தில்குமாரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர்.
அப்போது யார் நீங்கள் என்று செந்தில்குமார் கேட்ட பொழுது நாங்கள் ஹெச்டிஎஃப்சி வங்கியில் இருந்து வருகிறோம். வாகனத்தின் தவணை செலுத்தாததால் வாகனத்தை விட்டுச் செல்லும்படி மிரட்டி உள்ளனர். அதனையடுத்து செந்தில்குமார் தனது மனைவி மகனுடன் வாகனத்தை விட்டு கீழே இறங்காமல் அவர் தொடர்ந்து ஈச்சர் வாகனத்தில் சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார்.
அதனையடுத்து வைகுந்தம் சுங்கச்சாவடியில் இருபதுக்கு மேற்பட்டோர் ஈச்சர் வாகனத்தை சுற்றி வளைத்து செந்தில்குமாரை மிரட்டி உள்ளனர். உடனே செந்தில்குமார் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் சங்ககிரி சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வைகுந்தம் சுங்கச்சாவடிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அந்த கும்பல் செந்தில்குமாரை விட்டு செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். தகவல் தெரிந்த மீடியா வருவதாக கேள்விப்பட்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டனர். அதனையடுத்து செந்தில்குமார் தனது மனைவி குழந்தையுடன் சங்ககிரி காவல் நிலையத்திற்கு ஈச்சர் லாரியுடன் சென்று தங்களை மர்ம கும்பல் துரத்தி வருவதாக புகார் அளித்துள்ளார்.
ஈச்சர் லாரியை வழிமறித்து மிரட்டிய கும்பல்... வங்கியிலிருந்து வருவதாகக் கூறி தவணைத் தொகை கேட்டு மிரட்டல்... சங்ககிரி சுங்கச்சாவடி அருகே பரபரப்பு#Salem | #Lorry | #Tollgate | #Police | #Finance |#ViralVideo | #HDFCbank pic.twitter.com/3W6Tkrtor7
— Polimer News (@polimernews) November 23, 2025
புகாரின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஹெச்டிஎஃப்சி வங்கியில் தவணை முறையில் லாரி வாங்கி ஓட்டி வந்ததாகவும், அந்த தவணையை தொடர்ந்து கட்டி வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மன உளைச்சலின் காரணமாக ஐந்து தவணைகள் கட்ட தவறிவிட்டதாகவும், அதே போல் வங்கியில் இருந்து வந்ததாக கூறி துரத்தி வந்தவர்கள் வங்கியைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள் போல் தெரிகிறது என்றும்,
வங்கியின் அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் எனவே அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை. போலீஸாரிடம் புகார் அளித்துள்ளோம். போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பட்டப்பகலில் சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸிலிருந்து சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி வரை ஈச்சர் வாகனத்தை 20க்கும் மேற்பட்ட கும்பல் துரத்தி வந்து தம்பதியரை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


