திருமணமான 5 நாட்களில் வெறுத்துப்போன வாழ்க்கை- ரயில் முன் பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை
திருச்செந்தூர் அருகே திருமணமான 5 நாளில் புதுமாப்பிள்ளை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக திருச்செந்தூர் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி ராஜமன்னியபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் இமானுவேல் எடிசன்(26). இவர் நாலுமாவடியில் உள்ள தனியார் பிரிண்டிங் பிரசில் வேலை பார்த்து வந்துள்ளார். இமானுவேல் எடிசனுக்கும் கோவில்பட்டியை சேர்ந்த அக்சால் என்ற பெண்ணிற்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கடந்த 16 ம் தேதி கோவில்பட்டியில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் ஆறுமுகநேரியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில் இன்று மாலை 6.20 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்ட நெல்லை செல்லும் பாசஞ்சர் ரயில் ஆறுமுகனேரி அருகே உள்ள அடைக்கலாபுரம் அருகே வந்தபோது இம்மானுவேல் எடிசன் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளர். சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் ரயில்வே எஸ்எஸ்ஐ சங்கர பாண்டியன், இம்மானுவேல் எடிசன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் முடிந்து 5 நாட்களில் புது மாப்பிள்ளை எதற்காக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

