முதலமைச்சரையே ஏமாற்றிய மாற்றுத்திறனாளி! அமைச்சர், ஆட்சியரிடம் பணம் மோசடி

 
MKS

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கீழசெல்வனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாபு. மாற்றுத்திறனாளியான இவர், சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் இந்திய அணி கேப்டன் என ஊரெல்லாம் கூறிவந்துள்ளார். 

தமிழக மாற்றுத்திறனாளிகள் அணி துணை கேப்டன் முத்துசாமி

 கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி லண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தலைமையில் இந்திய அணி கலந்து கொண்டதாகவும், அதில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்று விளையாடியதாகவும், அதில் இறுதி வரை முன்னேறி இறுதி சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று வந்துள்ளதாக கூறி ஊர் மக்களை ஏமாற்றிய வினோத் பாபு, அமைச்சர் ராஜகண்ணப்பனையும் நேரில் சென்று வாழ்த்து பெற்றுள்ளார். 

அப்போது தன்னுடைய தொகுதியைச் சேர்ந்த வினோத்பாபு பாகிஸ்தானை அவர்களது சொந்த நாட்டிலேயே தோற்கடித்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளதாக கருதி வினோத்பாபுவை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றுள்ளார் ராஜகண்ணப்பன். அப்போது முதலமைச்சரிடம் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென வினோத்பாபு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து வினோத்பாபு போலி ஆசாமி என்றும், அவர் சொன்னது அத்தனையும் பொய் என்றும்
சென்னை தலைமைச் செயலகத்திற்கு புகார் சென்றுள்ளது.

போலி உலககோப்பையுடன் வினோத்பாபு

இதையடுத்து உளவுத்துறை மூலம் வினோத் பாபுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஏமாற்றி இருப்பதும், அவரிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், அது போன்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வினோத் பாபுவிடம் விசாரித்ததில், அவர் கொண்டுவந்த கோப்பை, மேற்கு வங்காளத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியது தெரியவந்தது.  இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி வினோத்பாபு, முதலமைச்சரையும், அமைச்சரையும் ஏமாற்றியதுபோல் பல நிறுவனங்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.  மாவட்ட ஆட்சியிர் முதல் எம்.எல்.ஏ அமைச்சர் வரை ஏராளமானோரிடம் நிதியுதவி பெற்று இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.