இனி உடல் உறுப்பு தானம் செய்பவர்களை போற்ற தியாகச்சுவர் எழுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நிறுவப்பட்ட கொடையாளர்களின் பெயர்கள் பொறித்த மகத்தான தியாகச் சுவரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செய்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுடன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தாமே செய்து காட்டும் மிகச்சிறந்த மானுடப் பண்பில் உயர்ந்தவர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் 2009 ஆம் ஆண்டே உடல் தானம் செய்துள்ளார் என்பது நாம் எல்லாம் நினைந்து பெருமைப்பட தக்க வரலாற்று நிகழ்வாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார் துர்க்கா ஸ்டாலினும் 2009 ஆகஸ்ட் 28 இல் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் தங்களுடைய வாழ்நாள் இறுதியில் உடல் தானம் வழங்குவதற்கான உறுதிமொழிப்படிவத்தில் கையெழுத்திட்டார்கள். அந்த மகத்தான நிகழ்வு அப்போது மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் அவர்கள் இருவருக்கும் பெற்றுத்தந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடலுறுப்பு தானம் செய்பவர்களைப் பாராட்டும் வகையில், கடந்த 2023 செப்டம்பர் 23 ஆம் தேதி உடலுறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்தார். அந்தவகையில் உடலுறுப்பு தானம் செய்தவர்களின் திருவுடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற மாவட்ட அளவிலான அலுவலர்கள் அரசு மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
இந்தத் திட்டத்தை முதல்வர் அறிவித்தபிறகு இதுவரை 253 பேர் உடலுறுப்பு தானம் செய்து, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டிருக்கிறது. இப்படி இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வளவு பேர் உடலுறுப்பு தானம் செய்திருப்பது என்பது இந்திய அளவில் தமிழ்நாடு இன்றைக்கு முதலிடம் வகிக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்ததற்குப் பிறகு இந்திய அளவில் தமிழ்நாடு இத்திட்டத்திற்காக மத்திய அரசின் பல விருதுகளை ஆண்டு தோறும் பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டும் கூட அதிக அளவில் உடலுறுப்பு தானம் செய்தவர்கள் என்கின்ற வகையில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்தது. இந்த திட்டம் அறிவித்தபிறகு இதுவரை உடலுறுப்பு தானம் பதிவு செய்திருப்பவர்கள் 23,189 பேர். இப்படி இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் இந்த சிறப்புக்குரிய திட்டத்திற்கு மேலும் நிறைவேற்றுகின்ற வகையில் தியாகச் சுவர் நிறுவப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் இதுபோல் நிறுவப்படவிருக்கிறது என மா.சுப்பிரமணியம் கூறினார் .


