உண்டியல் பணத்துடன் வீட்டுக்கு தெரியாமல் திருப்பதி கோயிலுக்கு ரயில் ஏறி சென்ற சிறுவனால் பரபரப்பு
ஐதராபாத்தில் காணாமல் போன சிறுவனை போலீசார் திருப்பதியில் மீட்டனர்.

தெலங்கானா ஐதராபாத்தில் உள்ள மீர்பேட் தாசரி நாராயண ராவ் காலனியைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி - கவிதா தம்பதியின் இரண்டாவது மகன் மகேந்திர ரெட்டி அங்குள்ள தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமை (இம்மாதம் 4ஆம் தேதி) டியூஷன் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து சென்றார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் மகேந்தர் ரெட்டி வீடு திரும்பாததால் பெற்றோர் மீர்பேட் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் பைக்கில் செல்வது தெரிந்தது. அதன் அடிப்படையில், மேலும் சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் மலக்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து திருப்பதிக்கு ரயிலில் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து திருப்பதி போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து மகேந்தர் ரெட்டி திருப்பதி பஸ் ஸ்டாண்ட் அருகே இருப்பதை கவனித்த போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதற்கு முன்பு பஸ்சில் வந்த ஒருவர் மூலம் மகேந்தர் ரெட்டி அவரது அம்மா கவிதாவிற்கு போன் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்ததாகவும் சாமி தரிசனம் முடித்து வீட்டிற்கு வருவதாக கூறியிருந்தார். பின்னர் திருப்பதி போலீசார் அவரது பெற்றோருக்கு வீடியோ கால் மூலம் பேச வைத்தனர். அப்போது அவர்களது உறவினர் திருப்பதியில் இருப்பதால் அவர்கள் மூலம் பெற்றோருடன் சேர்க்க அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மகேந்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் ஏழுமலையான் கோயிலுக்கு பெற்றோருடன் இதற்கு முன்பு 15 முறை வந்துள்ளேன். மீண்டும் திருப்பதிக்கு செல்ல வேண்டும் என ஆசையாக இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டியூஷனுக்கு செல்லாமல் ரயில் ஏறி திருப்பதி வந்தேன். இதற்காக வீட்டில் சிறுக சிறுக சேர்த்து வைத்த ரூ.1000 ரூபாய் பணத்தை கொண்டு ரயில் ஏறி திருப்பதி வந்தேன். மலைக்கு 10 மணிக்கு தரிசனத்திற்கு சென்றேன் காலை 4 மணிக்கு தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்ட் வந்தேன். என்னுடன் பஸ்சில் வந்த ஒரு அண்ணாவின் மூலம் போன் செய்து எனது அம்மாவிடம் பேசி வீட்டிற்கு வருவதாக தெரிவித்தேன் என்றான்.


