பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் முதல் கட்டமாக 3057 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது . இதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாணவர்களுடைய கல்வியை ஊக்க ஊக்குவிக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் ,தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள வாகனத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு , உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர். கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.