முதலமைச்சர் வந்த ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த வடமாநில பெண் - பெரும் பரபரப்பு

 
train

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துகொண்டிருந்த ரயிலின் அபாய சங்கிலியை வடமாநில பெண் ஒருவர் பிடித்து இழுத்ததால் ரயில் நடுவழியில் நின்ற நிலையில், இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக வேலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

MK Stalin

2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் சென்னை திரும்பினார்.  ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலல் 7.15 மணிக்கு காட்பாடியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தார். ரயில் திருவலம் அடுத்த முகுந்தராயபுரம் அருகே சென்றபோது வடமாநில பெண் பயணி ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்த தால் ரயில் நடுவழியில் நின்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,  விரைந்து வந்த போலீசார்  அந்த வடமாநில பெண் பயணியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தெரியாமல் கைப்பட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் எச்சரித்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். இதனிடையே ரெயில்வே அதிகாரிகள் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். இதன் காரணமாக ரயில் ஒரு சில நிமிடங்கள் கால தாமதமாக அரக்கோணம் வந்தடைந்தது. இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர்.