“தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம்”- ஆதவ் அர்ஜூனா

 
ழ் ழ்

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு வழங்கக்கோரி அம்பத்தூரில் கடந்த 9 நாட்களாக பெண் தூய்மைப் பணியாளர்கள்  தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவெக பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் ஐயா அவர்களும், திரு.ஆதவ் அர்ஜுனா (பொதுச்செயலாளர், (தேர்தல் பிரச்சார மேலாண்மை) அவர்களும் போராடும் மக்களை நேரில் சந்தித்து பேசினார்கள். பின்னர் பெண் தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். தூய்மை பணியாளர்களிடம் குழந்தைகளின் விவரங்களை கேட்டு அறிந்து அவர்களின் கல்விக்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்தனர்.

Image

பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்காக உழைப்போர் உரிமை இயக்கத்தினர் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை முதலமைச்சர், துணை முதலமைச்சர் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட யாரும் வந்து பார்க்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பெண் தூய்மை பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும். கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஏன் இன்னும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபவர்களை பார்க்கவில்லை. முதலமைச்சர் பரிசீலனை செய்து போர்க்கால அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.  தூய்மை பணியில் ஈடுபடும் 90% மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதால் பிரச்சினையை தீர்க்க வேண்டிய மாநில  எஸ்சி, எஸ்டி ஆணையம் தூங்கிக் கொண்டு உள்ளதா என கேள்வி எழும்புகிறது. ஆணையத்தை கூட்ட வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு தான் உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு உணவளிக்கிறோம் என முதலமைச்சர் கூறுவது பண்ணையார் தனமாக உள்ளது. இது அரசு செய்யக் கூடிய வேலையா, தமிழக அரசு  வேலை கொடுத்தால் தேவைகள் அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். 1956க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும் வேலை கொடுக்காமல் நடுரோட்டில் நிறுத்தி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். கம்யூனிஸ்ட் மற்றும. விடுதலை சிறுத்தை இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் குழந்தைகளின் கல்வி கட்டணம் குறித்து கேட்டு வருகிறோம் விவரம் கிடைத்தவுடன் அவர்களுக்கு உதவிகள் செய்யப்படும்” என்றார்.

பொதுச் செயலாளர் ஆனந்த் பேசுகையில், 1956 தூய்மை பணியாளர்களுக்கும் அடிப்படை தேவையான மளிகை பொருட்கள் அடுத்த வாரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கொடுக்கப்படும் எனக் கூறினார்.