ஜூன் 20ல் அமமுக செயற்குழு கூட்டம் - டிடிவி தினகரன் அறிவிப்பு..
அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டியில், ஓபிஎஸ் தொடர் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். முன்னதாக இதேபோல் இரட்டை இலையை கைப்பற்ற டிடிவி தினகரனும் கடுமையாக முயன்று, அது கைகூடாமல் போனது. இதனையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் அண்மையில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இருவரும் சேர்ந்து அதிமுகவை மீட்டெடுப்பதாக கூறினர். அதன்பின்னர் ஓபிஎஸ் மாபெரும் மாநாட்டை நடத்தினார். இதேபோல் டிடிவி தினகரனும் அமமுக செயற்குழு கூட்டம் குறித்து அறிவித்தார்.
முதலில் செயற்குழு கூட்டம் ஜூன் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூன் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம், வருகின்ற ஜூன் 20ஆம் தேதி, செவ்வாய்க் கிழமை, காலை 09.00 மணி அளவில், சென்னை, ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும். அனைத்து கழக செயற்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.