“லாக் அப் மரணம் குறித்து தகவலறிந்தவுடன் நடவடிக்கை”.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..
லாக் அப் மரணம் குறித்து தகவல் அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஓரணியில் தமிழ்நாடு என்ற மகத்தான முன்னெடுப்பை திமுக சார்பில் தொடங்கி வைத்துள்ளேன். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பரப்புரை, ஒன்றிய அரசு வஞ்சிப்பது தொடர்பான விளக்கங்கள் இருக்கும். இன்று முதல் 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறுகிறது. நாளை ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. ஜூலை 3 முதல் தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம்.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுகவினர் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வீடுகளில் சென்று சந்திக்க உள்ளனர். தமிழ்நாட்டில் மண்,மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம். ஒன்றிய பாஜக அரசால் தமிழ்நாடு, தமிழ் பாதிக்கப்பட்டுள்ளது. அறிவியல், பண்பாடு, மொழி என எல்லாவற்றிலும் தமிழ்நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து வசூலிக்கப்படும் வரியை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தருவதில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்குவதில்லை.

தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை ஒன்றிய அரசு தரவில்லை; கல்விக்கான நிதியை தருவதில்லை; தேசிய கல்விக்கொள்கை இந்தி திணிப்பு கொள்கையாக மட்டுமே உள்ளது. நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கீழடி அறிக்கையை வெளியிடாமல் தமிழரின் வரலாற்றை மறைக்க முயல்கிறது மத்திய அரசு. தமிழரின் வரலாற்று பெருமை கீழடி அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. தமிழ்நாட்டின் எம்.பி. தொகுதிகளை குறைக்க திட்டம் தீட்டி வருகிறது. நான் முன் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனை.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அனைவர் வீட்டிலும் சென்று சந்திக்க உள்ளோம். தமிழ்நாட்டில் மண், மொழி, மானம் காக்க மக்களை ஒன்று திரட்டுவதே நோக்கம். தமிழ்நாட்டை எப்படி எல்லாம் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும். தமிழ்நாட்டின் மீதான பொருளாதார போரை எதிர்கொள்ள நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தேவை. கட்சிகளை தாண்டி தமிழ்நாட்டுக்காக தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும்”என்று கூறினார்.

தொடர்ந்து சிவகங்கை லாக்கப் மரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “லாக் அப் மரணம் பற்றி தகவல் அறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராக இருக்கிறது; தயாராகி நீண்ட நாட்களாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி இப்போதுதான் மக்களை சந்திக்க போகிறார். நாங்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். கூடுதல் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது ” என்று தெரிவித்தார்.


