கலாஷேத்ராவில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
கலாஷேத்ராவில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவர்கள் அமைப்பு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், பாலியல் தொல்லை அளித்துவரும் பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ. பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். மத்திய அரசு நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது என்றும், காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலாஷேத்ராவில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், “காவல்துறைக்கு இதுவரை எந்த எழுத்துப்பூர்வ புகாரும் வரவில்லை. தேசிய மகளிர் ஆணையம் முதலில் தானாக முன்வந்து பாலியல் தொல்லை என டிவிட்டர் செய்தி போட்டு டிஜிபிக்கு கடிதம் எழுதியது. கலாஷேத்ரா பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணையை முடித்துவிட்டதாக தேசிய மகளிர் ஆணையம், டிஜிபிக்கு கடிதம் எழுதியது. விசாரணையை முடித்துவிட்டதாக கூறிய பின்னர் கலாஷேத்ராவுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.