போரூர் அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்!
சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக சென்றுள்ளார். காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு சென்ற அவர், மருத்துவர்கள் ஏன் வரவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர்கள் வராததால் ஆத்திரம் அடைந்த நடிகர் கஞ்சா கருப்பு மக்களுடன் சேர்ந்து மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 7 மணியில் இருந்து மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைத்ததாகக் கூறி ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.


