தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்தார் நடிகர் ரஜினிகாந்த்..
சென்னை அடையாறு தனியார் கல்லூரியில் நடந்துவரும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் இந்திய திரைப்பட சம்மேளனத்தில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தவிர, வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்டியிட தகுதியில்லை என கவுன்சில் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் மற்றும் நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோரை நியமித்தது. இதனையடுத்து ஏப்ரல் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடத்தப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 1ம் தேதி நடைபெற உள்ளது என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.
அதன்படி தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு செயலாளர்கள், ஒரு பொருளாளர், 26 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்தவகையில் சென்னை அடையாறு தனியார் கல்லூரியில் நடந்துவரும் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.