“நானும் மதுரைக்காரன் தாண்டா... மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க”- நடிகர் விஷால்
நானும் மதுரைக்காரன் தாண்டா... மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டார்கள் என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணம் மதுரை திருமங்கலத்தில் நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் மதுரை வருகை தந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், “செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும்? எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க... எங்கம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். 2006இல் திமிரு பட சூட்டிங் போது வந்தேன் 19 வருஷம் கழிச்சு இப்ப வந்திருக்கிறேன். மனசார வேண்டிக் கொண்டேன்.
நடிகர் சங்க கட்டிடம் தாமதத்திற்கு காரணம் நான் இல்லை, ஆறு மாதத்தில் முடிக்க வேண்டியதை நடிகர் சங்கம் தேர்தல் வைத்து எண்ணிக்கை என்ற பேரில் நீதிமன்றம் சென்றதால் 3 வருடம் தாமதம் ஆகிவிட்டது. இன்னும் நான்கு மாதத்தில் கட்டிடம் பெரிசாக வந்துவிடும். என்னை இயக்குனர்கள் விட்டு விட மாட்டார்கள்... நானும் மதுரைக்காரன் தாண்டா! மதுரை மக்கள் ஒரு விஷயத்துல மாறவே மாட்டாங்க. ஒன்று பாசம், மற்றொன்று உணவு. இந்த இரண்டு விஷயத்தில் மாறவே மாட்டார்கள்... நூறு வருஷம் கழிச்சு வந்தாலும் அதே பாசம் சிரிப்பு இருக்கும்
இந்தியா-பாகிஸ்தான் போர் தேவையில்லாதது, இதை தவிர்த்து இருக்கலாம். நம்மை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. எல்லா நாட்டிற்கும் எல்லைகள் போடப்பட்டுள்ளது. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் போரே தேவையில்லை” என்றார்.


