தி.மு.க. ஆட்சி காலங்கள் தான் ஊழல் நிறைந்த காலங்களாக இருக்கிறது - நடிகை குஷ்பு

 
குஷ்பு

தமிழகத்தில் திமுக ஆட்சி செய்த காலங்கள் தான் ஊழல் நிறைந்த காலங்களாக இருக்கிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறியுள்ளார். 

தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான நடிகை குஷ்பு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் தான் கல்வி புரட்சி நடந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் கூறி இருக்கிறார்.  அப்படி கல்வி புரட்சி ஏற்பட்டு இருந்தால் முதலில் தி.மு.க.வினர் அனைவரும் நன்றாக படித்து இருப்பார்களே? ஊழல் செய்து இருக்க மாட்டார்களே! ஜெயிலுக்கு போக மாட்டார்களே. ஆனால் தி.மு.க. ஆட்சி காலங்கள் ஊழல் நிறைந்த காலங்களாகத்தானே இருக்கிறது. அமைச்சரே 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததை குறிப்பிட்டுள்ளார். 

உண்மையாகவே கல்வி புரட்சி செய்து இருந்தால், மக்கள் நல அரசியலை செய்து இருந்தால் தி.மு.க.வும் தேசிய அளவில் வளர்ந்து இருக்கும். ஏன், மு.க.ஸ்டாலின் பிரதமராக கூட வந்திருப்பாரே. தமிழ்நாடு எங்கோ போயிருக்குமே. திராவிட மாடல் என்பது ஊழல் மாடலாகத்தானே எல்லோருக்கும் தெரிகிறது. ஒரு கட்சி, ஆட்சியை மக்கள்தான் பாராட்ட வேண்டும். ஆனால் எங்கள் ஆட்சி சூப்பர் என்று தனக்கு தானே பாராட்டி கொள்வதை நிச்சயம் மக்கள் ரசிக்க மாட்டார்கள். கிண்டல்தான் செய்வார்கள். 2 வருட தி.மு.க. ஆட்சியில் மக்கள் நொந்து போய் இருக்கிறார்கள். இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு கூறினார்.