“பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வேண்டுமென மனதில்பட்டது”- கரூரில் கண் கலங்கிய நடிகை அம்பிகா

 
அ அ

யாரையும், எந்த கட்சியையும் குறை சொல்வதற்காக நான் கரூருக்கு வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என நடிகை அம்பிகா கூறினார். 

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரூரில் நடந்த துயர சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று கரூர் வந்துள்ளேன். யாரையும், எந்த கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. அரசும், கட்சிகளும் நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கி கொண்டு செய்கின்றனர். அதற்காக அவர்களை அடித்து தடுத்து நிறுத்த முடியுமா? இனிமேல் இப்படி நடக்கக் கூடாது. நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்த சாயமும் பூச வேண்டாம். நான் எந்த கட்சி சார்ந்தம் பேச வரவில்லை. குழந்தைகளை அழைத்து வந்தது பெற்றோர்களின் தவறு, கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது இதுபோன்ற நிகழ்வுகளை டிவி முன்பு அமர்ந்து பார்க்கலாம். இதுபோன்ற துயரம் இனி எப்போதும் நடக்க கூடாது ஒரு சம்பவம் நடந்த பிறகு யாரையும் குறை சொல்வதில் அர்த்தமில்லை கூட்டங்களின் போது உரிய அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்ற வேண்டும்.சம்பவம் குறித்து அறிந்த உடனே வர வேண்டுமென நினைத்தேன், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க வேண்டுமென மனதில்பட்டது” என்றார்.