முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம்..

 
tn govt

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சரின்  காலை உணவுத்திட்டம்  மூலம்  1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் இந்த திட்டம்  அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  அதன்படி இத்திட்டம்  வருகிற 25ம் தேதி முதல்  அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.  திருக்குவளையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தற்போது  இந்த திட்டத்தை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.  

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் :

அதில், “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தினந்தோறும் கண்காணிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவுத் திட்டம்) ஆகியோருக்கு பொறுப்புகளை கூடுதலாக நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது”என்றும், மேலும்,  இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் காய்கறிகளுடன் 100 மி.லி. சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும் எனவும்,  வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.